நதிநீர் பிரச்னைக்கு தீர்வாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி அதன் பாதுகாப்பை ராணுவ மயமாக்க வேண்டுமென விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதிநீர் பிரச்னையாக மாறக் காரணமாக இருந்தது திமுக. தற்போது தமிழக மக்களை திசை திருப்பி தங்களை நியாயவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் திமுகவின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக நலனில் அக்கறை உள்ள யாவரும் கலந்து கொள்ளக் கூடாது. நதிநீர் பிரச்னை என்பது இன்றைய சூழலில் உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. இந்தியாவில் உள்ள மக்களின் தண்ணீர் தேவைகளுக்கான ஒரே தீர்வு நதிகளை தேசியமயமாக்கி, அவற்றை இணைத்து அதன் பாதுகாப்பை ராணுவ மயமாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண சட்டப்படி அதிகாரம் மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும். அதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். ஆகையால் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.