வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக் கூடாதே என்பதால்தான்... ஸ்டாலின் உரை

வேறு யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை திமுக மேற்கொண்டது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
stalin
stalin


சென்னை: வேறு யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை திமுக மேற்கொண்டது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கீட்டினை முறையாகவும் சட்டப்படியும் செய்வதற்குக் கர்நாடக அரசு தவறிவிட்ட காரணத்தினால், கடந்த ஐந்தாண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயம் பொய்த்துப் போய் விட்டது. இந்த ஆண்டு சம்பாவும் கேள்விக் குறியாகி விட்டது. முப்போகம் என்பது ஒரு போகம் மட்டும்தான் என்று சுருங்கி, தற்போது அந்த ஒரு போகத்திற்கும்  ஊறு விளைந்து சூனியமாகி விட்டது. விவசாயப் பெருமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அறவழிப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய போராட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவும், போராட்டங்களில் பங்கேற்கவும் முன்வந்திருக்கின்றன.

விவசாய அமைப்புகளின் கூட்டத்தை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை நேரடியாக நானும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தினோம்.

பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் - ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சி என்ற முறையிலும், தற்போது சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சி என்ற முறையிலும் - கூட்டிட முன்வரவேண்டும் எனக் கேட்டு வந்தன.

கர்நாடக மாநிலத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் அரசியல் கட்சிகளும் கூட, கர்நாடக அரசுடன் கைகோர்த்து ஓரணியில் திரண்டு, பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், அந்தக் கூட்டங்களில் முன்னாள் பிரதமர், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் உச்சமன்ற நீதிபதி, மத்திய அரசின் இன்றைய அமைச்சர்கள் கலந்து கொண்டதையும், ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும், அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரையும் மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்திப்பதையும் கண்ணுற்ற பிறகும் கூட, தமிழக அரசு ஜனநாயக ரீதியான கலந்துரையாடலை மேற்கொள்ளஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிடத் தொடர்ந்து தயக்கம் காட்டியதால்; இனியும் தாமதித்தால் தமிழகத்தின் ஒற்றுமையைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்படுவதைத் தவிர்த்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதென முடிவெடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன. அப்படிக் கூட்டப்படும் கூட்டம் தி.மு.க. நடத்தும் கூட்டமல்ல; தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டிட நடத்தப்படும் கூட்டம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டிட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடின்றி, கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிட வேண்டும் என்று பகிரங்கமாக, மெத்தப் பணிவோடு, நான் அழைப்பு விடுத்தேன்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, விவசாயிகளின் நலனுக்காகவும், உரிமைகள் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு அல்ல, அ.தி.மு.க. அரசு அல்ல, வேறு எந்தக் கட்சி கூட்ட முன்வந்திருந்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிட முன்றேன்னக் கழகம் நிச்சயம் கலந்து கொண்டிருந்திருக்கும். வேறு யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை - அதன் மூலமாகக் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திட வேண்டிய கட்டாயத்தை - கடமையாகக் கருதி நாங்களே மேற்கொண்டிருக்கிறோம்.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கவும், உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகளை மறுதலிக்கவும், நீதி - நியாயம் - சட்ட நெறிமுறைகளைப் புறக்கணிக்கவும், கருத்து  வேறுபாடு - கட்சி மாறுபாடு மறந்து அனைத்துக் கட்சிகளும் கர்நாடகத்திலே ஒரே நோக்கில் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். எதிர்மறையான எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள அங்கே அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.

போற்றுபவர் போற்றினாலும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றினாலும், நமக்கேற்ற கருத்தை இங்கே கூடியிருக்கும் நாம், உள்ளத்தில் ஒளியோடும் வாக்கினில் உண்மையோடும் எடுத்துரைப்போம்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் நாம் அனைவரும் எப்போதும் இணைந்தே போராட இங்கே சூளுரை மேற்கொள்வோம்! என்று சொல்லி, இன்று வராதவர்களும் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து; உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக, வருக என்று மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com