வைகோ - திருமாவளவன் கருத்து வேறுபாடு?

மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ - திருமாவளவன் கருத்து வேறுபாடு?

மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, 3 தொகுதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தன்னிச்சையான அறிவிப்பால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்த நிலையில், இப்போது திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, திருமாவளவன் இடையே மோதல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால், அரசு அதற்கு முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (அக்.25) அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பும் அனுப்பி இருக்கிறார். இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பாஜக, தேமுதிக கட்சிகள் அறிவித்துவிட்டன.
அதுபோல, மக்கள் நலக் கூட்டணியும் புறக்கணிப்பதாக அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்ட கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, "திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம். அதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொள்ளாது' என்றார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "திமுக அதிகாரத்தில் இருந்தபோது காவிரிப் பிரச்னை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிப்பது நம்பத்தகுந்ததல்ல. அதனால்தான், அவர்கள் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை கூட்டணி எடுத்துள்ளோம்' என்று மீண்டும் தெரிவித்தார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கருத்துக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது எனவும், இதுதொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, திமுக கூட்டும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மூன்று தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (அக்.26) தொடங்க உள்ள சூழலில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்ற கட்சிகளைப் பங்கேற்க வைத்து எல்லா கட்சிகளும் திமுக-வை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிதான் இது என்கின்றனர் மதிமுக நிர்வாகிகள்.
"கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை'
மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், "திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்தும், அதில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேசுவது' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில், கூட்டத்துக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "காவிரிப் பிரச்னையை தேர்தல் அரசியலோடு முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம். அதை பொதுப் பிரச்னையாகவே பார்ப்போம் என்கிற வகையில், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் தோழமைக் கட்சிகளைச் சந்தித்தோம். எனவே, மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com