காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக மரங்களில் குடியிருக்கும் வவ்வால் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடிக்காமல் விஷார் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்டது விஷார் கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது. இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன.
இம்மரங்களில் குடியிருக்கும் வெளவால்களை தங்கள் கிராமத்தின் நினைவுச் சின்னமாக மக்கள் கருதினர்.
அதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பல தலைமுறைகளாக வெடிப்பதில்லை.
ஒளி தரும் பட்டாசுகளான பூச்சட்டி, சங்கு சக்கரம், மத்தாப்பு போன்றவையும், பூண்டு வெடி, குருவி வெடி போன்ற பட்டாசுக்களை மட்டுமே வெடித்து வருகின்றனர்.
அந்த வெடிகளும் வவ்வால்கள் தொங்கும் மரத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே வெடிக்கின்றனர். எவ்வித இடையூறுகளாலம் அந்த வவ்வால்கள் இந்த மரங்கலை விட்டு செல்லக் கூடாது என்பதில் கிராம மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.