ஆழம் பார்க்கும் திமுக; அதிருப்தியில் காங்கிரஸார்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்களை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது.
ஆழம் பார்க்கும் திமுக; அதிருப்தியில் காங்கிரஸார்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்களை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், திமுகவினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தத் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அண்மையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸுக்கு குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என அவர் கோரினார். ஆனால், அதை ஏற்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

காங்கிரஸின் மாவட்டத் தலைவர்களுடன் திமுக மாவட்டச் செயலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். வெற்றி வாய்ப்புக்கேற்ப காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார். அதை திருநாவுக்கரசரும் ஏற்றுக் கொண்டார்.

மிகக் குறைந்தபட்சமாக காங்கிரஸுக்கு 10 சதவீத இடங்களாவது கிடைக்கும் என திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸார் எதிர்பார்த்தனர். ஆனால், காங்கிரஸுக்குச் சில இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது. இது காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை எதிர்த்து வேட்பாளர்கள்: திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. அவற்றில் 14, 37, 44 ஆகிய 3 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக தலைமை ஒதுக்கி அறிவித்துள்ளது. இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலர் கே.என்.நேருவிடம் 2 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். 8 வார்டுகள் வரை கேட்டோம். அவரும் தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், திடீரென 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

2006, உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. 2011-இல் நாங்கள் அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட்டு, ஓர் இடத்தில் வெற்றி பெற்றதுடன், அனைத்து வார்டுகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றோம். காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள மாநகராட்சிகளில் இதுவும் ஒன்று.

திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 3 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றால், திமுக வேட்பாளர்களை எதிர்த்து எங்களது கட்சியினர் நிற்பதை தடுக்க முடியாது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடமும் தெரிவித்துவிட்டேன்.

திமுகவினரை எதிர்த்து காங்கிரஸார் சுயேச்சையாகப் போட்டியிட்டால், அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்.

இதுகுறித்து திமுக தலைமையுடன் திருநாவுக்கரசர் பேசுவதாகச் சொல்லியுள்ளார். திமுகவின் முடிவில் மாற்றமில்லாவிட்டால், எங்கள் முடிவிலும் மாற்றமில்லை என்றார் அவர்.

சேலத்தில் குளறுபடி: சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் காங்கிரஸுக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

ஆனால், சேலம் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 6 வார்டுகள் வரை ஒதுக்குவதாகக் கூறி, அதற்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், திமுக தலைமை 5 வார்டுகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சேலம் காங்கிரஸாரும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பி.மேகநாதன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 6 வார்டுகள் வரை மட்டுமே ஒதுக்க, சேலம் திமுக நிர்வாகிகள் முன்வந்ததில் எங்களுக்கு உண்மையில் போதுமான திருப்தி இல்லை. எனினும், கூட்டணி தர்மத்துக்காக உடன்பட்டோம். தற்போது, அதையும் குறைத்து அறிவித்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. 8, 9, 16, 17, 36 ஆகிய வார்டுகளுடன் 38-ஆவது வார்டும் காங்கிரஸுக்கு என்றுதான் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், 38-ஆவது வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்த வார்டை எங்களுக்கு திமுக தலைமை ஒதுக்காவிட்டால், எங்களது முடிவு தீவிரமாக இருக்கும் என்றார் அவர்.

தூத்துக்குடியில் திருப்தி: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஓரளவு திருப்தி அளிப்பதாகவே தூத்துக்குடி மாநகர் மாவட்டத் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ். அருள் கூறினார்.

கோபத்தில் காங்கிரஸார்: காங்கிரûஸ ஆழம் பார்ப்பதற்காகவே 12 மாநகராட்சிகளில் 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் திமுக தலைமை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதர மாநகராட்சிகளிலும் திருச்சி மாநகராட்சியை விடவும் குறைவான இடங்களே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் 6-8 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வேலூர் என இதர மாநகராட்சிகளிலும் காங்கிரஸுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் திருநாவுக்கரசரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரும் ஸ்டாலினை புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்தப் பிரச்னையில் சமரசம் ஏற்படாவிட்டால், திமுக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸார் போட்டியிடுவதை திருநாவுக்கரசராலேயே தடுக்க முடியாது என்றே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com