மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை (செப்.29) இரவு தெரிவித்துள்ளது.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நிபுணர்கள் குழு அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், சிகிச்சையில் அவருக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் பாதிப்பு முழுவதுமாக குணமடைந்துவிட்டது.
வழக்கமான உணவுகளை அவர் எடுத்துக் கொள்கிறார். இருப்பினும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், அரசு ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் வெளியிட்டார். மேலும் காவிரி நதி நீர்ப் பிரச்னை தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
8 நாள்கள்: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தொடர்ந்து 8-ஆவது நாளாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை (செப். 29) இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் மேலும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.