சென்னை: தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை கட்சியினர் யாரும் வந்து சந்திக்கக் கூ டாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தேசத்துரோக வழக்கில், மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
எனது கைதைக் கண்டித்து மதிமுகவின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி முன்னணியினர் யாரும் எந்த விதமான போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. அத்துடன் சிறைக்கு வந்து என்னை சந்திக்கவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் கோர முகம் குறித்து நமது இளைஞர்கள் யாருக்கும் முழுமையாக தெரியவில்லை. அத்துடன் இது பற்றிய விஷயங்களை முழுமையாக மூடி மறைக்க சர்வதேச அளவில் சதி நடக்கிறது. இது பற்றிய சர்வதேச பொது விசாரணை வேண்டும்.
இவ்வாறு வைகோ தனது பேட்டியில் தெரிவித்தார்.