சென்னை: திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட அரசுக்கு நான்கு வாரங்கள் அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது
திருநங்கைகளுக்கு தனிகழிப்பறை கட்ட உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது சென்னையில் 4 இடங்களில் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்டபட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமுக நலத்துறை சார்பாக சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, கடிதத்தின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் சென்னையில் திருநங்கைகள் அதிகமாக வசிக்கும் தண்டையார்பேட்டை, சூளைமேடு, புளியந்தோப்பு, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தனி கழிப்பறை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை பரிந்துரைத்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 4 இடங்களிலும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட அரசுக்கு நான்கு வாரங்கள் அனுமதி வழங்கியும், அதன் பின்னர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது