தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105 டிகிரி பதிவானது.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களிலும் வெயில் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரிக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவானது. அதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலடுக்கு சுழற்சியானது வலுவிழந்துவிட்டதால் மழை எங்கும் பதிவாகவில்லை.
வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வெப்பச்சலனத்தின் மூலம் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையின் காரணமாக வெப்பம் அதிகரிக்கவே செய்யும் என்றனர்.
8 இடங்களில் சதம்: செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடற்காற்றின் காரணமாக பிற இடங்களைக் காட்டிலும் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 105
வேலூர், சேலம், மதுரை 103
திருப்பத்தூர், திருச்சி, பாளையங்கோட்டை 102
தருமபுரி 100
கோவை 98
சென்னை 96