அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை: டி.டி.வி தினகரன் மனு ஒத்திவைப்பு! 

ஆர்.கே,நகர் தேர்தல் முடியும் வரை அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற டி.டி.வி தினகரனின் மனு மீதான.. 
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை: டி.டி.வி தினகரன் மனு ஒத்திவைப்பு! 

சென்னை: ஆர்.கே,நகர் தேர்தல் முடியும் வரை அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் மனு மீதான விசாரணையை, வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீது அமலாக்கத்துறை கடந்த 1994-ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகள் தொடர்ந்தது. அந்த வழக்கில் இருந்து தினகரனை விடுவித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் வழக்கு விசாரணையை தினமும் நடத்த வேண்டும் என்றும் எழும்பூர் பெருநகர நீதிமன்றதிற்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிஇடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் தேர்தல் முடியும் வரை வழக்கு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்நிலையில் தினகரனின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின் பொழுது வரும் 13-ஆம் தேதி எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற உள்ள விசாரணையின் பொழுது தினகரனை ஆஜர் ஆகக் கோரி கட்டாயப்படுத்த மாட்டோம் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு தினகரன் ஆஜர் ஆகாவிட்டாலும் அவர் இல்லாமல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

அதே சமயம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவித்து எழும்பூர் பெருநகர நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்த பின்னரும், மீண்டும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டதை எதிர்த்து மனு ஒன்றையும் தினகரன் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதற்கான ஆவணங்களையும் 13 அன்று  சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com