அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் வைப்பு நிதி செலுத்தப்படாதது குறித்து விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் அரசுக்கு சொந்தமான சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் உளள ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடி வைப்பு நிதி வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படவில்லை என வைப்பு நிதி கூடுதல் ஆணையர் பிடி.சின்ஹா ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் செய்தார். இது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என கிரண்பேடி கூறியிருந்தார். ஊழியர் வைப்பு நிதியை வேறு திட்டத்திற்கு மாற்றுவதோ அல்லது செலுத்தாமல் இருப்பதோ மிகப்பெரிய கிரிமினல் குற்றம் ஆகும் எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் வைப்பு நிதி செலுத்தாதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை செயலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவிக்கு வந்து 8 மாதங்களாக முதல்வரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிரண்பேடி கூறினார்.
இந்நிலையில் ஆளுநர் செயலாளர் ஜி.தேவநீதிதாஸ் தொழிலாளர் துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தொழிலாளர்கள், அரசு ஊழியர்களுக்கான வைப்பு நிதி என்பது நல்வாழ்வுத் திட்டங்களில் ஒன்றாகும். வைப்பு நிதி ஆணையத்தால் எழுப்பப்பட்டுள்ள இப்பிரச்னை தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். தொழிலாளர் துறை இதில் உடனே கவனத்தை செலுத்த வேண்டும்.
இப்பிரச்னை தொடர்பாக பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அதிகாரியை நியமித்து ஆய்வு செய்து வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும். தொழிலாளர் துறை செயலாளர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.