சென்னை: ஆர்.கே நகர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார மோதல் வழக்கு தொடர்பாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வத்தின் அண்ணன் ராஜா மற்றும் மகன் ரவீந்தரநாத் குமார் ஆகிய இருவரும், முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே நகர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் முனுசாமி ஆகியோர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் சடலம் சவப்பெட்டியில் இருப்பது போன்ற பொம்மையை வைத்து, அதற்கு தேசிய கொடி போர்த்தி, பிரச்சரத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அம்மா அணியினர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.கல்வீச்சும் நடந்தது. இதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வத்தின் அண்ணன் ராஜா மற்றும் மகன் ரவீந்தரநாத் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களிருவரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தாங்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இல்லாத பொழுது, தங்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.