சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் நியமனங்கள், பணியிட மாற்றங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், அத் துறையின் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 55 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ஆய்வுகளில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கல் மட்டுமின்றி, சுகாதாரத் துறை நியமனங்கள், பணியிட மாற்றங்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு மேல் கையூட்டாக கிடைத்திருக்கிறது.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் கையாட்டாக வாங்கப்பட்டிருக்கிறது. மருந்துகள், தளவாடங்கள் வாங்கியதிலும் ஊழல் நடைபெற்றிருக்கிறது.
இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.