சென்னை: தில்லியில் 28 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிணைந்து, இன்று நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.
வறட்சி நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களில் சிலர் தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியைக் கண்டித்து, முழு நிர்வாண போராட்டடத்தில் கூட ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவது அதிர்ச்சியலைகளை உண்டாக்கியது.
இந்நிலையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதிகமான அளவில் இன்று ஒன்றிணைந்து, நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.
அங்கு அவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து கோஷமிட்டனர். அருகில் உள்ள ஹாடோஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலை ஈடுபடவும் சிலர் முயன்றனர். அவர்களில் சிலர் அரை நிர்வாண கோலத்திலிருந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.