சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பிலேயே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்று திமுக துணைப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் அதிகஅளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரின் காணமாக தேர்தல் ரத்து செய்யுப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திமுக ராஜ்யசபா உறுப்பினர்களான ஆலந்தூர் பாரதி,. டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திருச்சி சிவா ஆகிய மூவரும் இன்று மும்பையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகரராவை சந்தித்தனர். தமிழக அரசை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் பொழுது இவர்களுடன் திமுக துணை ப்பொதுச் செயலாளர் துரைமுருகனும் உடனிருந்தார்.
சந்திப்பிற்குப் பின்பு சென்னை திரும்பிய துரைமுருகன் விமான நிலையத்த்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பிலேயே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.இப்படிப்பட்ட ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல.
கடுமையான துஷ்ப்ரயோகத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டியல்போட்டு பண விநியோகம் நடந்துள்ளது. எனவே இது குறித்து கண்டிப்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.