வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கோரந்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கிராமம் கோரந்தங்கல். இங்கே தனியார் பள்ளிக்கான கட்டிடமொன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இதற்கான கட்டுமான பணிகளில் 20-கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த பொழுது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இடிபாடுகளில் மேலும் 20 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.