விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு மீது அதிருப்தி: உச்ச நீதிமன்றம் கருத்து!
புதுதில்லி: விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு கடும் அதிருப்தி அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். அவர்களை பிரதமர் சந்திக்காமல் மறுத்ததைக் கண்டித்து அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நிர்வாண போராட்டம் நடத்தியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக தமிழக பொது வழக்காடு மையம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களாவது:
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு கடும் அதிருப்தி அளிக்கிறது. இந்த் பிரச்சினையை ஆரம்பம் முதலே அரசு கையாண்ட விதம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் திருப்தியளிக்கவில்லை. எனவே இன்னும் இரண்டு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.