சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் மற்றும் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்கும் கூட்டம் அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்.19) பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை தினகரன் எம்எல்ஏ கூட்டத்தை கூட்ட உள்ளது குறித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக விதிப்படி தலைமை நிலைய செயலரே எம்எல்ஏ கூட்டத்தை கூட்டும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் தான் உள்ளனர். அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை. தற்போது நிலவி வரும் குழப்பத்திற்கு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.