கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் அருகே, புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பாமகவினர் டாஸ்மாக் மதுக்கடை திறக்கவுள்ள கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பாமக உழவர் பேரியக்கத்தின் மாநில செயலர் இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலர் ஏ.வி.இமயவர்மன், ஒன்றிய செயலர் வஜ்ஜிரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.