மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சர்வதேச தரத்தில் ரூ.60 கோடி செலவில் அமைக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
கொடைக்கானலில் மே மாதம் நடைபெற உள்ள கோடை விழா தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடை விழாவை முன்னிட்டு மே மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பதற்கு போக்குவரத்து துறை அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.60 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். ரூ. 1 கோடி செலவில் பழனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பால் பண்ணை விரைவில் தொடங்கப்படும். அதிமுகவின் இரு அணிகளும் ஒரு வாரத்திற்குள் இணையும் என்றார்.
முன்னதாக, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களைப் பார்வையிட்ட அமைச்சர், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி மேற்கொண்டார்.