எனக்கு எதிராக அரவக்குறிச்சி எம்எல்ஏவின் திசை திருப்பும் முயற்சிகள் தோல்வியில்தான் முடியும் என செந்தில்பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர்.
கரூரில் திங்கள்கிழமை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் முட்டுக்கட்டை போடுவதாகவும், இதைக்கண்டித்து வரும் 28-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார்.
வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியினருக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. 27 ஆம் தேதி இடம் வாங்கி, 28 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்ய அவசரம் காட்டியது ஏன்? மருத்துவக் கவுன்சில் விதிப்படி கல்லூரி அமைக்க 20 ஏக்கர் நிலம் வேண்டும். காந்திகிராமத்தில் ஏற்கெனவே 15.26 ஏக்கரும், 10 ஏக்கரில் பூங்கா வர இருந்த இடமும் உள்ளது. இந்த இடத்துக்கு அரசாணை இல்லை என்கிறார்கள். தடை ஆணை வாங்குபவர்களுக்கு அரசாணை இல்லாமல் கல்லூரி கட்ட முடியுமா எனத் தெரிய வேண்டாமா? இந்த இடம் இல்லையென்றாலும் புறவழிச்சாலையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமாக 87 ஏக்கர் நிலம் உள்ளது. கரூர் தொகுதியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கட்சிக்கும் விசுவாசமாக செயல்படவில்லை.
கரூரில் மருத்துவக்கல்லூரி என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசத்தயார். எனக்கு எதிராக அரவக்குறிச்சி எம்எல்ஏவின் திசை திருப்பும் முயற்சிகள் தோல்வியில் தான் முடியும் என்றார்.