சேலம்: தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் நல்லாட்சி மலரும் என்று முன்னாள் கல்வி அமைச்சரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் எம்.எல்.ஏவுமான செம்மலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் கல்வி அமைச்சரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் எம்.எல்.ஏவுமான செம்மலை கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அதிமுக இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்தை நடத்துவதற்கு அந்த அணியிடம் இருந்து முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டாம் என்று அனைவரும் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவதை பொறுத்தவரை எங்கள் தரப்பில் இரண்டே இரண்டு நிபந்தனைகள் மட்டும்தான்.அவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்.
சட்டமன்றத்தில் தலைமை என்பதை விட தொண்டர்கள் மனநிலைதான் மிகவும் முக்கியம். எனவே தமிழகத்தில் ஊழல் அற்ற நல்லாட்சியை வழங்கிட பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும். எனவே விரைவில் தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி மலரும்.
இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.