இலங்கையில் ஹிந்துமத அடையாள அழிப்புக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன.
ஹிந்து மக்களின் அவல நிலை, இலங்கையில் ஹிந்துமத அடையாள அழிப்பு குறித்து, இந்து மக்கள் கட்சியின் சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், மேற்கு வங்க இந்து சமிதி அமைப்புத் தலைவர் தப்பன் கோஷ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்திய - இலங்கை நட்புறவு கழக தலைவர் காசி ஆனந்தன், இலங்கை சிவசேனை அமைப்பு தலைவர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர், நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்தரங்கில் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பேசியதாவது:
தமிழ் இனத்தை அழிக்கும் வகையில் போர் தொடக்கப்பட்டு லட்சக்கணக்கானோரை இலங்கை அழித்தது. அதன்பிறகு, அங்குள்ள தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், இலங்கையில் 600-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள் உள்ளிட்ட ஹிந்து மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், இந்தியாவிலும் மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் ஹிந்து மக்கள் அவல நிலையை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடி பௌத்த மத மாநாட்டுக்காக இலங்கைக்கு வர உள்ளார். அங்குள்ள தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை அவர் இலங்கைக்கு வரக்கூடாது. அத்துடன், இலங்கையில் ஹிந்து மத அடையாள அழிப்புக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.