உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி. தினகரன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
அதிமுக துணைப் பொதுச் செயலரான டி.டி.வி.தினகரன், லண்டனில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தின் இயக்குநர். இந்தியாவில் இருந்து ரிசர்வ் வங்கி அனுமதியின்றி 1 கோடியே 4 லட்சத்து 95,313 அமெரிக்க டாலரை பிரிட்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பியதாகவும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி லண்டனில் ஹோட்டல் கட்டுவதற்கு 36 லட்சத்து 36,000 அமெரிக்க டாலர், 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்ததாகவும் தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும், எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு வழக்குகளிலும் தினகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை அண்மையில் தொடங்கியது.
இன்வெஸ்ட்மென்ட் வழக்கில் தினகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி, அவரது வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பெற்றனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், டி.டி.வி. தினகரன் மீது ஏற்கெனவே பதியப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தும், மீண்டும் குற்றச்சாட்டை பதிவு செய்யக் கோரியும் உத்தரவிட்டது.
மீண்டும் குற்றச்சாட்டு பதிவு: இந்த உத்தரவையடுத்து, வழக்கை விசாரிக்கும் எழும்பூர் இரண்டாவது பொருளாதாரக் குற்றவியல் நடுவர் மன்றம், டி.டி.வி. தினகரனை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை நேரில் ஆஜரானார்.
அவரிடம், நீதித்துறை நடுவர் மலர்மதி வழக்கின் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி, அதைப் பதிவு செய்தார். அப்போது அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக தினகரன் கூறினார். அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் தினகரன் சம்மதித்தார். இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்குரைஞர்கள் அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய, தங்களுக்கு வழக்குக்குரிய ஆவணங்களைத் தர வேண்டும் எனக் கேட்டனர். இதையடுத்து, நீதித்துறை நடுவர் மலர்மதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்று அமலாக்கத்துறையினர் வழக்கின் ஆவணங்களை வழங்குவார்கள் என்று உத்தரவிட்டார்.