சென்னை: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு பயின்று வந்தவர் வளர்மதி. இவர் கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தி வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் தற்பொழுது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டம் போடப்பட்டதும் உடனடியாக மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மாணவி வளர்மதி உரிய அனுமதி பெற்றுத்தான் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறுமென்று தெரிகிறது