திருச்சி: நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினை வரவேற்க கத்தியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது
முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இன்றுகாலை திருச்சி வந்தார். அவரை வரவேற்பதற்காக அவரது அணியினை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
அப்பொழுது கூட்டத்தில் நின்றிருந்த ஒருவரது கையில் கத்தி இருந்ததனை பார்த்த அங்கிருந்த அதிமுகவினர் அவரைப் பிடித்து அடித்து, விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிய வருகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே விமான நிலைய பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்களும், ஓபிஎஸ் ஆதர்வாளர்களுமான பரஞ்சோதி மற்றும் பூனாட்சி ஆகிய, இருவரும் விமான நிலைய காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆணையரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.