காதல் திருமணம் செய்த மகள்: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! 

மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், அவமானம் என்று கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
காதல் திருமணம் செய்த மகள்: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! 

சேலம்: மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், அவமானம் என்று கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன் பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேந்திரன் (50). விவசாயி. இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு மோகனா (21), ஆர்த்தி (19) என்ற 2 மகள்களும், நவீன்குமர் (15) என்ற மகனும் உள்ளனர். 

மூத்த மகளான மோகனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். அதற்கான பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு செல்லும் பொழுது மோகனாவிற்கும், பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே காதல் உண்டானது.

இந்த காதல் விவகாரம் மோகனாவின் பெற்றோருக்கு தெரிய வந்த போது அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பினை மீறி மோகனா அடிக்கடி காதலனை சந்தித்து வந்தார். இதனால்  இந்த காதல் விவகாரம் ஊர் மக்களுக்கும் தெரியவந்தது.

இந்நிலையில் மோகனாவும், மணியும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நேற்று பாதுகாப்பு கேட்டு காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைத்தனர்.

அதேசமயம் மகள் மாயமானது குறித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்து இருந்தார்.  போலீசாரின் விசாரணையில் மோகனா  காதல் திருமணம் செய்த விவகாரம் அவர்களுக்கு தெரியவந்தது. இந்த தகவல் மோகனாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை அறிந்த ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் வருந்தினார், குடும்பத்திற்கு தீராத அவமானம் வந்து விட்டது என்று கருதி அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

அதன்படி ராஜேந்திரன், அவரது மனைவி ராணி, மகள் ஆர்த்தி, மகன் நவீன்குமார் ஆகிய நால்வரும் நேற்று இரவு விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து உயிர் விட்டனர்.

இன்று காலை நீண்டநேரம் ஆகியும் ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தார் அங்கு சென்று பார்த்தபோது நால்வரும்  வாயில் நுரை தள்ளிய படி பிணமாக கிடந்தனர்.

தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவதின் காரணமாக  அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com