இன்று இரவு பகுதிநேர சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு விவரம்

இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இன்று இரவு பகுதிநேர சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு விவரம்


சென்னை: இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்திர கிரகணம் தோன்றும் என்றனர். அதேவேளையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது.

இந்தியாவைப் பொருத்தவரை, சந்திர கிரகணத்தைக் காண மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, நிலவின் மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், இன்று தோன்றும் சந்திர கிரகணம் குறித்து கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிபிரசாத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் சந்திர கிரகணம் ஒன்று தோன்றியது. ஆனால், அப்போது பூமியின் நிழலின் ஊடே நிலா கடந்து செல்லாமல் அதன் புற வெளியில் கடந்து போனது. இதனால், அந்த கிரகணத்தை காண இயலவில்லை.

இந்நிலையில், இன்று நிகழப் போகும் சந்திர கிரணகத்தின்போது பூமியின் பகுதியளவு நிழல் நிலவின் மீது படரும். எனவே, அதனை நம்மால் காண முடியும். இன்றைய தினம் இரவு 10.20 மணிக்கு தோன்றும் கிரகணம் நள்ளிரவு 12.05 வரை நீடிக்கும் என்றார் அவர்.

சென்னை பிர்லா கோலரங்கில் பகுதிநேர சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வெறும் கண்களால் சந்திர கிரகணத்தைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் சந்திர கிரகணத்தை தொலை நோக்கி மூலம் காண்பதற்கான ஏற்பாடு அறிவியல் மையத்தில் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ஜா.துரைராஜ் ஞானமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தைக் காண இயலும். சந்திர கிரகணத்தை மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே தொலை நோக்கி மூலம் காண முடியும்.

இதற்கான ஏற்பாடுகள் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் செய்யப்பட்டுள்ளன. இதை வெறும் கண்களாலேயும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் கோயில் நடை அடைக்கப்படும்

சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை இரவு அனைத்து நடைகளும் அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் இரவு 10.20 மணி முதல் நள்ளிரவு 12.05 வரை ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை மாலை 4.30 மணி முதல் மறுநாள் (ஆக. 8) காலை 7 மணி வரை கோவிலில் உள்ள மகாதுவாரம் உள்பட அனைத்து நடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“நடைகள் மூடப்படும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. மேலும் லட்டு பிரசாதம், அன்னதான திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதையடுத்து 8 ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படும். பக்தர்களின் தரிசனத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் வழக்கம்போல கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் நாளை கருட சேவை உட்பட எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது” என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாச ராஜூ தெரிவித்தார்.

வேலூர் பொற்கோவில்
பெளர்ணமி தினமான திங்கள்கிழமை (ஆக.7) சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, பொற்கோயிலில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாராயணி பீடம் பொற்கோயில் தினந்தோறும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், பெளர்ணமி தினமான சந்திர கிரகணம் நிகழவிருப்பதால் அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 8 மணிக்கு திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறப்பில் மாற்றம்
சந்திரகிரஹணத்தையொட்டி திங்கள்கிழமை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ஆடி பெளர்ணமி அன்று சந்திரகிரஹணம் ஏற்படுவதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாக அதிகாரி ப. கவிதா பிரியதர்சினி தெரிவித்தார்.

திருநகர் சித்தி விநாயகர் - திருநகர் இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட சித்தி விநாயகர் கோயிலில் சந்திரகிரஹணத்தையொட்டி திங்கள்கிழமை காலையில் 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிவரை செயல்படும். மாலையில் திறக்கப்பட மாட்டாது. செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கோயில் திறக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com