வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல்பகுதி வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல்பகுதி வரை, வட தமிழக கடலோரம் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும் என்றனர்.
மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 50 மி.மீ., வால்பாறையில் 40 மி.மீ., சென்னை, தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ., மழையும் பதிவானது. ஆலங்காயம், போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி, போளூர், பரூர், உத்தமபாளையம், எண்ணூர், வானூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.