அதிமுக அம்மா அணியில் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வழங்கிய கட்சிப் பதவியை ஏற்று செயல்படுவேன் என்று பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.கதிர்காமு கூறினார்.
இவர், அதிமுக அம்மா அணியில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சியில் சட்டப் பேரவை உறுப்பினராக மட்டும் தொடர்ந்து செயலாற்றப் போவதாக கே.கதிர்காமு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேனியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவத் துறையில் நான் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் எனக்கு மாநில மருத்துவர் அணி இணைச் செயலர் பதவி வழங்கியுள்ளார். எனது உடல் நிலை மற்றும் சொந்தக் காரணங்களால் இந்தப் பணியை செவ்வனே செய்ய முடியுமா என்ற ஐயத்தில், சட்டப் பேரவை உறுப்பினராக மட்டும் செயலாற்றுவேன் என்று தெரிவித்திருந்தேன்.
தற்போது, இந்த வாய்ப்பை ஏற்பதில் எனக்கு தயக்கம் இல்லை. டிடிவி தினகரன் வழங்கிய பதவியை ஏற்று, அவரது வழிகாட்டுதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மேலும் பல ஆண்டுகள் தொடர்வதற்கு கட்சியில் ஓரணியாக இருந்து செயல்படுவேன். தொகுதி மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை விட்டு விலகி நிற்க மாட்டேன். ஓரிரு நாள்களில் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசுவேன் என்றார்.