சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ஒரு மணி நேரம் தெரிந்த பகுதி சந்திர கிரகணத்தை திங்கள்கிழமை இரவு 600-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் டாக்டர் பி.ஐயம்பெருமாள் தினமணி நிருபரிடம் கூறியதாவது: சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் நகர்ந்து செல்லும்போது, அதன் ஒளி சற்று குறைவாகக் காணப்படும்.
இந்தியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திங்கள்கிழமை இரவு 10.48-க்கு முழுமையான பகுதி சந்திர கிரகணம் தொடங்கி, இரவு 11.43 மணி வரை தெரிந்தது. எனினும் நள்ளிரவு 12.48 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நீடித்தது.
4 தொலைநோக்கிகள் மூலம்...கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 600-க்கும் மேற்பட்ட வானியல் ஆர்வலர்கள் 4 தொலைநோக்கிகள் மூலம் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்வையிட்டனர்.