சென்னை: அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்க வேண்டுமென்று எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது என்று அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பூங்கொத்து குடுத்து வாழ்த்து தெரிவித்தேன். சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடபப்ட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தேன்.
சமீபத்தில் பதவி அறிவிக்கப்பட்டவர்கள் சிலர் அதனை மறுப்பதற்கு அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சிலரின் நடவடிக்கைதான் காரணம். பதவி அறிவிக்கப்பட்ட பின் பாதி நிர்வாகிகள் கட்சிக்கு திரும்பி விட்டனர். மீதமுள்ளவர்களும் விரைவில் கட்சிக்கு திரும்பி விடுவார்கள்.
தன்னை வளர்த்து இந்த அளவுக்கு ஆளாக்கிய குடும்பத்திற்கே துரோகம் செய்ய நினைக்கும் ஒருவராகத்தான் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இருக்கிறார். தன்னை சார்ந்தவர்களுக்கு தண்ணீர் கூட தர மனம் இல்லாதவராக அவர் இருக்கிறார்.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்க வேண்டுமென்று எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அனால் தற்பொழுது தமிழ்நாட்டில் 12 முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.
அதிமுகவின் எதிர்காலமே டிடிவி தினகரன்தான். அவர் தலைமை பதவிக்கு வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும். எல்லாரும் எளிதில் அணுகக்கூடியவராக அவர் இருக்கிறார். தன்னிடம் வரும் எல்லா மனுக்கள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார்.
நான் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ மற்றும் ஸ்டாலின் ஆகிய அனைவருடனும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் டிடிவி தினகரன் போல ஜனநாயகத்தன்மை கொண்டவர்களை கண்டதில்லை.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.