கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் கொடுமைக்கு நாடு முழுவதும் 7 ஆண்டுகளில் 71 பேர் உயிரிழந்திருப்பது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்லூரி மற்றும் கல்லூரி விடுதி வளாகங்களில் ராகிங்கைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவு விவரத்தை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2007 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் வரை நாடு முழுவதும் 717 ராங்கிங் வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 97 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 75 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 73 வழக்குகளும் தமிழகத்தில் 54 வழக்குகளும், கர்நாடகத்தில் 48 வழக்குகளும், மகாராஷ்டிரத்தில் 42 வழக்குகளும், பஞ்சாபில் 35 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் ராகிங் கொடுமையால் உயிரிழந்த மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்கள் 71 பேர் என்பது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் அதிபட்சமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் தலா 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 7 பேர், கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அது மட்டுமின்றி, ராகிங் கொடுமை காரணமாக 199 பேர் சிறு மற்றும் படுகாயங்களை அடைந்துள்ளனர். 128 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். 129 பேர் குழு மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டிருக்கின்றனர். 35 பேர் மது மற்றும் சிகரெட் குடிக்க வைத்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். 25 பேர் ஜாதி, மதரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ராகிங் வழக்குகளில் 44 சதவீதம் அதாவது 314 வழக்குகள் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.