கும்பகோணம்: தமிழகத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறாவிட்டால், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான எந்திரங்களை அடித்து நொறுக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் இறுதியில் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் ஓஎன்ஜிசியை வெளியேற்றக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒட்டி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் போராட்டத்தை யாரேனும் தூண்டிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள கற்சிலைகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கதிராமங்கலம் மக்களை யாரோ தூண்டிவிடுவதாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் கூறிவருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராடுமாறு பொதுமக்களை தான் தூண்டிவிடுவதாக அதிகாரிகளுக்கு பதில் அளித்த வைகோ, தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் தூண்டிவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முடிந்தால் என் மீது ஓஎன்ஜிசி வழக்கு தொடரட்டும் என்றவர் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது போல் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை அடித்து நொறுக்க இளைஞர்களை திரட்ட இருப்பதாகவும் வைகோ ஆவேசத்துடன் கூறினார்.
மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பொதித்திருந்த எண்ணெய் குழாய் 4வது முறையாக உடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் கசிவை கண்ட மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், அந்த பகுதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது, ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போவதாகவும் வைகோ அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.