அனைத்து பிரச்னைகளுக்கும் மேலூரில் கூட்டத்தில் விடைகிடைக்கும் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: அரசியலில் அவரவர் நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள சில காரியங்களைச் செய்வர். அதைத் தவறெனக் கூற முடியாது.
துணைப் பொதுச் செயலர் சொன்னதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் யாரையும் குறிப்பிட்டு 420 என சொல்லவில்லை. 420 என்ற சட்டப்பிரிவைத்தான் தினகரன் கூறினார். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், தலைமை நிலையச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அர்த்தமற்றுப் பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. மேலூரில் திங்கள்கிழமை (ஆக.14) நடைபெறவுள்ள கூட்டம் இதற்குப் பதில் சொல்லும் என்றார் திவாகரன்.