தமிழகத்தில் வரும் 15 நாள்களுக்குள் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு சிறப்பு சிகிச்சை முகாமை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை குறைக்க பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு, கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 35,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளோம். டெங்கு பாதித்த நோயாளிகளை கண்காணிக்கவும், மருத்துவம் பார்க்கவும் 770 மருத்துவர்கள், 416 நடமாடும் மருத்துவ குழுக்களும் உள்ளன.
3,700 சுகாதார ஆய்வாளர்கள், 160 நோய்க்குறியியல் மருத்துவர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக்கி, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் டெங்குவை ஒழிக்கும், சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வரும் 15 நாள்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
திண்டுக்கல், கன்னியாகுமரி, கோவை ஆகிய 3 இடங்களில் எடுக்கப்பட்ட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் வைரஸ் பரிசோதனைக்காக கிண்டி கிங் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வந்துள்ள முடிவுகளில் டெங்கு காய்ச்சலின் முதல் பிரிவு எனத் தெரியவந்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
இறப்பு இல்லை...: டெங்குவினால் இறப்பு ஏதும் இல்லை. மாறாக ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுடன், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களே இறந்துள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் காலை 11 மணி முதல் 12 வரை தங்களது வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை...: தனியார் கட்டடங்களின் உரிமையாளர்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதம் உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதைதொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தி, மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.