புதுதில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இன்னும் ஆறு மாத காலம் ஆகும் என்று மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதின்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் பொழுது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை பயன்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இன்னும் ஆறுமாத காலம் ஆகும். தற்பொழுது தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவு பெற இன்னும் ஆறு மாத காலம் ஆகும் என்பதால், அதற்கு முன் தேர்தலை நடத்த முடியாது' என்று தெரிவித்தார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்தல் தேதியினை அறிவிக்க இயலாது என்று நீங்கள் கூறுவது, தமிழகத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழலை காட்டுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.
அதே நேரம் உயர் நீதிமன்றத்தில் இதே போன்றதொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கினை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரி, திமுக மனு ஒன்றினை தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்கினை தாங்கள் முழுமையாக விசாரிக்க உள்ளதாக கூறி, நீதிமன்றம் அவர்களது மனுவினை தள்ளுபடி செய்தது.