ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 11,500 கன அடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலம், கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளிலிருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் கடந்த சில நாள்களாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதற்கிடையே, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி ஆற்றுநீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அருவிக்கு வரும் நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை படிப்படியாக அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 11,500 கன அடியாக வந்தது. இதனால், பிரதான அருவி, சினி அருவி, ஜந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வேகம் அதிகரித்து புகைப்போல நீர் கொட்டி வருகிறது.
போலீஸார் கண்காணிப்பு: தொடர் விடுமுறைக் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள், நீர்வரத்து கூடுதலாக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆற்றில் மழைநீரும் சேர்ந்து வருவதால் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்புக் கருதி, முதலைப் பண்ணை, கோத்திக்கல், ஊட்டமலை சாலை பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.