வேட்பாளர்களின் உடல் தகுதிச் சான்று தனி மனித சுதந்திரமாகுமா? நீதிமன்றம் கேள்வி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வேட்பாளர்களின் உடல் தகுதிச் சான்று தனி மனித சுதந்திரமாகுமா? நீதிமன்றம் கேள்வி


சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ் கோரப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு,  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவுடன் உடல்தகுதிச் சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது? சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்குக் கூட உடல் தகுதிச் சான்றிதழ் கேட்கும்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு உடல் தகுதிச் சான்றிதழ் ஏன் கேட்கக் கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். உடல் தகுதிச் சான்றிதழ் கேட்பது தனிமனித சுதந்திரமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் செயல்படுத்த முடியும் என்று கூறியது.

நாட்டை ஆள்பவருக்கு உடல் தகுதி தேவையில்லை என்று கருத முடியுமா? பொது வாழ்க்கைக்கு வந்த பின் எப்படி தனி மனித சுதந்திரத்தைப் பற்றி பேச முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

பிறகு, உடல் தகுதிச் சான்று தொடர்பாக உடனடியாக ஆணை பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, வழக்கின் தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com