புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரதம் வேண்டுமென்று கோருகிறார். ஆனால் மக்களோ உண்மை பாரதம் வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறினார்.
ஷரத் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய ராகுல், இந்தியாவில் தயாரிப்போம் என்ற கோஷத்தையும் கிண்டலடித்தார்.
அதாவது, மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா என்ற கோஷத்தோடுதான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது நாட்டில் கிடைப்பது எல்லாமே மேட் இன் சைனாவாகவே உள்ளது என்றார்.
2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அளித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவோம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம் போன்ற வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.
மோடி சொல்கிறார், தூய்மை பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று, ஆனால் மக்களோ உண்மை பாரதம் வேண்டுமென்று விரும்புகிறார்கள். எங்கெல்லாம் மோடி செல்கிறாரோ அங்கெல்லாம் அவர் பொய் பேசுகிறார் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.