ஓபிஎஸ்ஸை எக்காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம் என அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தகுதித் தேர்விலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு விலக்கு பெற புதுச்சேரி அரசு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை அரசு பாழாக்கியுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட புதுச்சேரி அரசு முயற்சிக்கவில்லை. இந்த மாதம் 28 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்த கால அவகாசம் இருந்தபோது புதுச்சேரி அரசு முன்கூட்டியே கலந்தாய்வை நடத்துவதற்கு என்ன காரணம்.
நீட் பிரச்னையில் இரட்டை வேடம்
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போடுகிறது. தொடர்ச்சியாக புதுச்சேரி அரசு தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பாக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
முதல்வர் நாராயணசாமியும், ஆளுநர் கிரண்பேடியும் தங்களுடைய மோதல் போக்கை கைவிட்டு மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ஆளுநரும்,
முதல்வரும் தாங்கள் வகிக்ககூடிய பதவிக்கு தகுதியற்றவர்களாக செயல்படுகின்றனர்.
புதுச்சேரி அதிமுகவில் அணிகள் எதுவும் கிடையாது. நாங்கள் ஒரே அணியாகதான் உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வராக உள்ளார். புதுச்சேரி வந்த அவரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அதிமுகவை பொறுத்தவரை இரண்டு அணிகள்தான் உள்ளன. ஓபிஎஸ்சை நாங்கள் எக்காரணம் கொண்டு ஏற்றுகொள்ள மாட்டோம் என்றார் அன்பழகன்.