சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்; வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியினர், இணைவதற்காக வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் ஏற்று, முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைப் பார்க்கிறேன். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அறிவிப்பு உட்பட இரண்டு அறிவிப்புகளையுமே வரவேற்கிறேன் என்றார்.
ஓபிஎஸ் அணியினரின் 2 முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளின் இணைப்பு சாத்தியம் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு நடவடிக்கையே என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். யார் வீட்டு பணத்தை வீணடிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உண்மை தெரிந்தால் அனைவருக்கும் நல்லதுதானே என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கருத்துத் தெரிவித்துள்ளார்.