தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
செவிலியர் கூட்டமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை தனியார் செவிலியர்களுக்கும் வழங்க வலியுறுத்தும் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் இரா.முத்தரசன் பேசியது: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு மருத்துவமனைகளின் படுக்கை எண்ணிக்கைகளுக்கேற்ப ரூ.20 ஆயிரம் முதல் ரூ.34,800 வரை ஊதியம் வழங்க வேண்டும். இதனைக் கேரள அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசும் இதனை அமல்படுத்த வேண்டும்.
அரசு செவிலியர்கள் உயிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படுவதைப் போன்று தனியார் மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும். தனியார் செவிலியர்களுக்குப் பணியிடங்களில் பாதுகாப்பும், பணிப் பாதுகாப்பும் (Job Security) அளிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில், செவிலியர் கூட்டமைப்பின் தலைவர் பூமிநாதன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.