நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மின்சாரம் பாய்ந்து 2 யானைகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.
தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள நெல்லிக்குன்னு புதூர்வயல் பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் 11 யானைகள் வந்துள்ளன. அவை அங்குள்ள தனியாருக்கு சொந்தமான பாக்குத் தோப்பில் இரவு முழுவதும் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நள்ளிரவிலிருந்து அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் நீண்ட நேரமாக ஒரு குட்டி யானை அப்பகுதியில் சப்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், யானைக் குட்டியை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 2 யானைகள் இறந்துகிடந்தது தெரியவந்தது.
யானைகள், இரவில் பாக்குமரத்தை சாய்த்தபோது பாக்கு மரம் அருகிலுள்ள மின்கம்பி மீது விழுந்ததில் மின்கம்பி அறுந்து அங்குள்ள கம்பி வேலி மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சுமார்15 வயதுடைய ஆண் யானையும், 18 வயதுடைய பெண் யானையும் உயிரிழந்தது தெரியவந்தது.
உதவி வனப் பாதுகாவலர் விஜயன், வனச் சரக அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன், யானைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பிறகு 2 யானைகளின் உடல்களும் அதே இடத்தில் புதைக்கப்பட்டன.