முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்னரே விடுவிக்க கோரிய மனுவுக்கு, எத்தனை முறை பதில் மனு தாக்கல் செய்வீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், பி.ராபர்ட் பயஸ் என்கிற குமாரலிங்கன் மற்றும் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர், கடந்த 2000 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவர்களின் தூக்குத் தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இந்த நிலையில், 'சிறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். எனவே எங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, அவர்கள் கடந்த 2012 -ஆம் ஆண்டு நவம்பரில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2012 -ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்குகள் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் 2012 -ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் வி.எம்.ஆர்.ராஜேந்திரன், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது 2012 -ஆம் ஆண்டின் நிலைப்பாடு என்பதால், தற்போதைய நிலைப்பாடு குறித்த புதிய பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரினார்.
இதில் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ஒரு வழக்கில் எத்தனை முறைதான் பதில் மனு தாக்கல் செய்வீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், புதிய பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை ஆகஸ்ட் 22 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.