வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடதமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 80 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 70 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலைய பகுதிகளில் தலா 60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் நாள்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றார் அவர்.