அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய அணிகள் திங்கட்கிழமை இணைந்தன. இதையடுத்து தமிழகத்தின் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
மேலும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.
சமீபகாலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். குறிப்பாக சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் தினசரி நடப்புகளை விமர்சித்து அவ்வப்போது ட்வீட் செய்தும் வருகிறார்.
குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக-வை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக-வின் நாளிதழான முரசொலி பவள விழாவில் கலந்துகொண்டவர் தனக்கு தன்மானம் தான் முக்கியம் என்றார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
காந்திக்குல்லா, காவிக்குல்லா, கஷ்மீர்குல்லா ஆகியவற்றுக்கு அடுத்து தற்போது தமிழர்கள் தலையில் கோமாளிக்குல்லா போடப்பட்டுள்ளது. இது போதுமா இல்லை இன்னும் வேண்டுமா? தமிழர்கள் இனியாவது தயவுசெய்து விழித்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தது.