சென்னை: அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைய உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிமுக துணைப் பொதுச் செயலர் தினகரனின் ஆதரவாளர்களும் வருகை தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பழனிசாமி, அதிமுக அணிகள் இணைப்புக் குறித்து அவரது ஆதரவாளர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தர உள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தருவார் என்று கூறப்படுகிறது.
இதற்காக, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நண்பகல் 12.10க்கு பன்னீர்செல்வம் அணியினர் கிளம்புவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சர்களும், பழனிசாமி அணியினர் பலரும் தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான அதிமுக தொண்டர்களும் தலைமை அலுவலக வளாகத்தில் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே, தினகரானால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். டிடிவி தினகரானால் கட்சியின் அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட மாதவரம் மூர்த்தி, டி.கே.எம் சின்னையா உள்ளிட்டோரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.