சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினரும் இன்று இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று மதியம் அணிகள் இணையும் என்றும், உடனடியாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மும்பையில் இருந்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் சென்னை வந்துள்ளார்.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், இரு தலைவர்களும், அதிமுக தலைமை அலுவலகம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அணிகள் இணைப்புக்காக, முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருக்கு அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.