அதிமுக கட்சி பிரச்னையில் பாஜக தலையிடவில்லை; அக்கட்சி உடைவதையும் நாங்கள் விரும்பவில்லை என மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வரும் போது பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். பாஜகவை தமிழகத்தில் முன்னணி நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுக என்ற கழகங்களின் ஆட்சிகள் இல்லாத நிலையிலே தமிழகம் முன்னேற்றமடையும் சூழல் ஏற்படும். ஆகவே தமிழக மக்கள் பாஜகவில் இணைவது அவசியமாகும்.
ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். ரஜினி அரசியலுக்கு வருவதற்காக தமிழ் அறிஞரான தமிழருவி மணியன் மாநாடு கூட்டுவது அவரது விருப்பம்.
அதிமுக கட்சி பிரச்னையில் பாஜக தலையிடவில்லை. அக்கட்சி உடைவதையும் பாஜக விரும்பவில்லை. அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் பாஜக தலையிடுவதாக ஸ்டாலின் கூறியிருப்பது சரியல்ல. தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க உதவும் படகுகள் வழங்குவது உள்ளிட்ட தமிழக நலனில் மத்திய அரசு போதிய அக்கறை செலுத்திவருகிறது என்றார்.
பேட்டியின் போது பாஜக மாநிலத்துணைத் தலைவர் ஆர்.சுரேந்திரன், மதுரை மாநகர தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் இருந்தனர்.